Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3.71 கோடி ரூபாய் மோசடி! சகோதரிகள் கைது!

By VASUKI
10 Sep 2025, 08:42 PM
லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு மனைகள் வாங்கித் தருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் ₹3.71 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவனத்தின் இரண்டு பெண் இயக்குநர்களைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அம்சவேணி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீலட்சுமி ஆகியோர் "லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம், வீட்டு மனைகள் வாங்கித் தருவதாக நம்ப வைத்து, 26 பேரிடம் இருந்து சுமார் ₹3 கோடியே 71 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று, பணத்தை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலீடு செய்தவர்களுக்கு நிலம் வழங்காமல் ஏமாற்றியதாகப் பல புகார்கள் எழுந்ததையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் நிறுவன இயக்குநர்களான அம்சவேணி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீலட்சுமி ஆகியோர் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற போலியான நிதி மற்றும் வீட்டுத் திட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள், உடனடியாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாமெனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.