Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

By VASUKI
08 Oct 2025, 04:04 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.
கரூர் அடுத்த வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு, சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த செருப்புகள், கட்சித் துண்டுகள் உள்ளிட்டவை 10 நாட்களுக்குப் பிறகு இன்று அகற்றப்பட்டன. இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தின் நிலை

தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஆகியவை விசாரணை நடத்தி வருவதால், சம்பவம் நடந்த இடம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

நெரிசலில் சிக்கி மக்கள் ஓடியபோது அங்கேயே விட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான செருப்புகள் மற்றும் கட்சித் துண்டுகள் தொடர்ந்து சிதறிக் கிடந்தன. இது விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் பார்வையிடுவதற்காக அகற்றப்படாமல் இருந்தது. விபத்து ஏற்படுத்தியதாகக் கருதப்பட்ட மரமும் வெட்டப்பட்டது.

துப்புரவுப் பணி மற்றும் கடைகள் திறப்பு

விசாரணை அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்ற நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு இன்று மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அந்தப் பகுதி முழுவதுமாகச் சுத்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்புக்காகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் 12 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன.

வணிகர்களின் கோரிக்கை

தொடர்ந்து 12 நாட்களாகக் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட வணிகர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அல்லது கட்சியினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிவாரணம் வழங்கப்படாவிட்டால், அவர்கள் மீது முறையான புகார் அளிக்கப்படும் என்றும் அப்பகுதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.