Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்!

By Christon
05 Oct 2025, 03:47 PM
கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.
கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) இன்று விசாரணையைத் தொடங்கினர்.

ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான இந்தக் குழுவினர், துயரச் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை நடத்தினர்.

விசாரணைக் குழு விவரங்கள்

கரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்த் தலைமையிலான தனிப்படைகள் விசாரித்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (SIT) ஒப்படைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் எஸ்பி சியமளா தேவி, எஸ்பி விமலா உட்பட 8 புலனாய்வுத் துறை காவல் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் கரூர் காவல் துறை இந்தக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.

எஸ்ஐடி-யின் விசாரணைத் திட்டம்

அதன் அடிப்படையில் இன்று கரூர் வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரத்தை முதலில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த த.வெ.க. கட்சி நிர்வாகிகள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சம்பவ இடத்தில் மின் விளக்கு மற்றும் ஜெனரேட்டர் அமைத்தவர் உள்ளிட்டோரையும் இந்தக் குழுவினர் தொடர்ச்சியாக விசாரணை செய்ய உள்ளனர்.