Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் நீதிமன்றத்தில் தாக்கல்!

By Christon
23 Oct 2025, 12:28 PM
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தமிழக அரசு ஒரு நபர் விசாரணை மற்றும் காவல்துறை சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவையும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழுவில், தமிழகத்துக்காக இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்யும் அதிகாரமும் குழுத் தலைவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர் நீதிமன்றத்தில் FIR தாக்கல்

இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

எப்.ஐ.ஆரைப் பெற்றுக்கொண்ட நீதிமன்றம், அதனை மதுரை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் வெளியாகும் எனத் தெரிகிறது.