Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

By nagalekshmi
17 Apr 2025, 09:35 AM
கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகளும், 4 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக நிசாந்த் (24), அரவிந்த் (24), வசந்த் என்கின்ற வசந்த குமார் ( 24), கலைவாணன் ( 29), கோகுல்நாத் ( 24), பார்த்திபன் ஆகியோரை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் நிசாந்த் மற்றும் அரவிந்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, வசந்த் என்கின்ற வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதேபோல், வேலாயுதம் பாளையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வேலாயுதம் பாளையத்தைச் சார்ந்த அப்துல் சமத் (59) என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.