தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கத் திட்டம்? - தவெக அரசின் புதிய அரசாணையால் சர்ச்சை

By Sumalekha
30 Jun 2026, 05:55 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் நீண்டகால எதிர்ப்பை மீறி, கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சுரங்கம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 1,144 ஹெக்டேர் நிலத்திற்கான ஒதுக்கீட்டு அனுமதியை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் அணுக் கனிம சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக, கடலோர கிராம மக்கள், மீனவர் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணுக் கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசுபாடு, கதிர்வீச்சு அபாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், தேசிய அளவிலான கனிம வள மேம்பாட்டுக்கு இந்தத் திட்டம் அவசியம் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இதனால், நில ஒதுக்கீட்டு அனுமதி நீட்டிப்பு தொடர்பான அரசாணை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.