Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்–ஆளுநர் ஆர்.என்.ரவி

By Jayakumar
30 Mar 2025, 09:27 PM
தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் பற்றுள்ள தலைவராக பிரதமர் திகழ்கிறார்

மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கம்பராமாயண விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கம்பராமாயண பெருமைகள் பற்றி பேசினார்.அவர் பேசும்பொழுது, நான் படித்துக் கொண்டிருந்தபொழுது வட இந்தியாவில், வடமொழியில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் பற்றி அங்குள்ள மக்கள் அனைவரும் பேசுவர், தமிழகத்தில் தமிழில் எழுதிய கம்பரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

நமது கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும்

இரண்டாவது முறையாக இன்று கம்பர் பிறந்த ஊருக்கு வந்திருக்கிறேன். ஆனால் கம்பரை பற்றி இங்கு உள்ள மக்கள் அதிக அளவு பேசவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. தமிழகம் முழுவதும் 45-க்கும் மேற்பட்ட கம்பர் கழகங்கள் மூலம் கம்பராமாயணம் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் விளங்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான அரசியல் காரணமாக நமது தமிழ் கலாச்சாரம் மறக்கடிக்கப்படுகிறது. இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நமது கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும்.

Read more: சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை- பின்னணி குறித்து போலீஸ் விசாரணை 

இந்தியாவில் வேறு எந்த தலைவரும் பிரதமர் நரேந்திர மோடி அளவிற்கு தமிழ் மீது பற்றுள்ளவர்கள் இல்லை. பல்வேறு நாடுகளில் திருவள்ளுவருக்கு முக்கியத்துவம் அளித்து பல நிகழ்ச்சிகளை அவர் செய்துள்ளார். செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவினார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி மூலம் தமிழ் கலாச்சாரம் பரப்பப்படுகிறது.

பற்றுள்ள தலைவராக பிரதமர் திகழ்கிறார்

 ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கத்தில் தியானத்தில் அமர்ந்து கம்பராமாயணத்தை கேட்ட பின்பு பிரதமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இப்படி தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் பற்றுள்ள தலைவராக பிரதமர் திகழ்கிறார்.

நமது கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். கம்பர் கழகங்கள் மட்டுமின்றி படிக்கும்  மாணவர்கள், இளைஞர்கள் மூலம் கம்பராமாயணத்தை நமது கலாச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.  கம்பராமாயணம் கம்பர் கழகங்களில் மட்டும் உள்ளது அது மக்களின் இதயங்களிலும் இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் கம்பர்மேட்டில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.