தமிழ்நாடு

காமராஜர் பிறந்தநாள்.. புகழாரம் சூட்டிய தலைவர்கள்

By Christon
15 Jul 2025, 10:36 AM
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும், அவரின் பிறந்தநாள் கல்வி வளற்சிஹ் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

விலைமதிப்பற்ற தலைமைத்துவம்- பிரதமர் மோடி

காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில், “காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

காமராசருக்குப் புகழ் வணக்கம்- முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று. கல்விக் கண் திறந்த காமராசருக்குப் புகழ் வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

பொதுநல வாழ்வின் உதாரணம்- எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர். சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர். நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த காமராஜரின் பிறந்த தினத்தில் அவருக்கு பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.