Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

By VASUKI
14 Feb 2025, 09:17 PM
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ சார்பில் கரூரில் 100-க்கும் மேற்பட்டோர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, முடக்கப்பட்ட அகவிலை தொகை சரண்டர் விடுப்பு தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை  களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.

 மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை இதனை கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டுப் போராட்ட குழுவான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் 25ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாக கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் விடுபட்டனர்.