தமிழ்நாடு

ISIS அமைப்புடன் தமிழகத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு.. NIA குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

By VASUKI
27 Jul 2025, 03:19 PM
தமிழகத்தினை சேர்ந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய முக்கிய குற்றவாளி என மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்ஃபாஸித் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நேற்றையத்தினம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லியில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அல்ஃபாஸித் பெயர் இடம்பெற்றுள்ளது.

சமீப காலமாக இளைஞர்களை தீவிரவாத சித்தாந்தங்களை நோக்கி ஈர்க்கும் வகையிலான வேலைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் மறைமுகமாக நடைப்பெற்று வருகிறது. அல்ஃபாஸித்தும், அவரது கூட்டாளிகளும் சமூக ஊடகங்கள் வாயிலாக நூற்றுக்கணக்கான இளம் முஸ்லிம் சிறுவர்களை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் படங்களைப் பரப்பியுள்ளனர். இதுத்தொடர்பான போதுமான ஆதாரங்கள் தங்கள் விசாரணையில் கிடைத்துள்ளதாகவும் NIA தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அல்ஃபாஸித் மற்றும் அவரது கூட்டாளிகள் இஸ்லாமிய அரசு” (Islamic States) மற்றும் “கருப்புக் கொடி வீரர்கள்” (Black Flag soldiers) என்கிற பெயரில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களை உருவாக்கியுள்ளதாகவும் ஏன்.ஐ.ஏ தரப்பில் தெரிவித்துள்ளது.

ISIS அமைப்பின் ’nashida33’ என்ற டெலிகிராம் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆவணங்களையும் அல்ஃபாஸித் பதிவிறக்கம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களைக் கண்காணிக்கவும், தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளை முடக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.