தமிழ்நாடு

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

By VASUKI
23 Sep 2025, 12:16 PM
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில், நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், நாங்குநேரி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த நவீன், காசிராமன், ராமகிருஷ்ணன், சூர்யா ஆகிய நான்கு இளைஞர்கள், ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றபோது, காவல்துறையினர் அவர்கள் மீது கஞ்சா கடத்தியதாகவும், கொலை முயற்சி செய்ததாகவும் பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த, குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் தொடர்ந்து இதுபோன்ற பொய் வழக்குகள் பதியப்படுகின்றன. எனவே, உண்மையை வெளிக்கொண்டுவர இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட நபர்கள் தொடர்பான ஒரு விஷயத்தை, எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு தங்கள் மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.