தமிழ்நாடு

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

By VASUKI
16 Apr 2025, 09:21 PM
2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் வங்கி மோசடி மற்றும் இணையவழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், மோசடியில் இழந்த பணத்தை அவர்களுக்கு திரும்ப பெற்றுத் தரவும், வங்கி நிர்வாகிகள் உடனடி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக அவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா, தலைமையில், மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு கூட்டத்தில் 41 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளைச் சார்ந்த (RBI உட்பட) 75 பொறுப்பு அதிகாரிகள், பங்கேற்றனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் 2023 ம் வருடத்தில் மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 118 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் 2024 ம் வருடம் மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் வங்கிகளின் சீரிய உதவியுடன் குற்ற செயல்களில் ஈடுபட்ட 87 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்திய வங்கி மோசடி குற்ற வழக்குகள் மற்றும் இணையவழி குற்ற வழக்குகள் சம்மந்தமாக பல்வேறு அம்சங்கள் குறித்தும், அதில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்கும் அவற்றை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகளிடையே உள்ள ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா விளக்கினார்.

இதையடுத்து வங்கிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை காவல்துறை அதிகாரிகள் முன்வைத்தனர். வங்கி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை மிகுந்த முன்னுரிமையுடன் எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் தொகையைத் திரும்பப் பெறுவதில் எந்த தாமதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழக்குகள் தொடர்பாக வங்கி விவரங்கள், KYC, முதல் நிலை அறிக்கைகள் தாமதமின்றி வங்கிகள் வழங்கப்படும்போது, விசாரணையில் பயனுள்ள முன்னேற்றம் ஏற்படும். வங்கிகள் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி, வழக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக காவல் துறைக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

சைபர் குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு, முதலீட்டு மோசடி மற்றும் டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக ஒவ்வொரு கிளையிலும் விழிப்புணர்வை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உங்கள் கிளைகளில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கும். RTGS பரிவர்த்தனைகளுக்காக கிளைக்கு வருபவர்களுக்கும் ஒரு சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

சைபர் குற்றங்கள் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு அதிக பண இழப்பை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து, அவர்களை மனச்சோர்வுக்கு கொண்டு செல்கின்றன. சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்காக சட்ட அமலாக்க மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு இடையே 24x7 மிகவும் வலுவான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, காவல் துணை ஆணையாளர்கள் செல்வராஜ், வனிதா, ஆரோக்கியம், கீதாஞ்சலி, கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் 4 காவல் மண்டலங்களைச் சேர்ந்த சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர் கலந்து கொண்டனர்.