Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

By Christon
24 Sep 2025, 12:40 PM
சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலைப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல கோழிப்பண்ணை நிறுவனமான சுகுணா புட்ஸ் நிறுவனத்தில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில், நேற்று (செப். 23) முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களில் இந்தச் சோதனை நடந்து வருகிறது.

நேற்று, ஒன்பது கார்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர்.

மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை

இன்றும் (செப். 24) கோவை, அவினாசி சாலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மற்றும் ஈரோட்டில் உள்ள சுகுணா புட்ஸ் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனை முடிந்த பின்னரே, வரி ஏய்ப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.