Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் போத்தீஸ் கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

By Christon
12 Sep 2025, 11:44 AM
பிரபலமான போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பிரபலமான போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று (செப்டம்பர் 12) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள போத்தீஸ் கடைகளில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் கோவையில் சோதனை

போத்தீஸ் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளர் போத்தீஸ் ரமேஷுக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கோவையில் உள்ள இரண்டு போத்தீஸ் துணிக்கடைகளிலும் காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நான்கு வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மற்றும் நெல்லையில் சோதனை
"
மேலும், நெல்லை வண்ணாரப்பேட்டை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள போத்தீஸ் கடைகளிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையின் காரணமாக அந்தந்தப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.