தமிழ்நாடு

ரூ.4,000 கோடி ஆண்டு வருமானம்: கெமிக்கல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடிச் சோதனை!

By VASUKI
04 Sep 2025, 02:11 PM
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் . முதற்கட்ட தகவலின் அடிப்படையில் ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய நிர்வாகிகள், தொழில் தொடர்பில் உள்ள நிறுவனங்களில் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆண்டுக்குச் சுமார் ரூ.4,000 கோடி வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான புரோமைன், இன்டஸ்ட்ரியல் சால்ட் போன்ற முக்கிய ரசாயனங்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்தச் சோதனையானது, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், தொழில் தொடர்புகள் உள்ள நிறுவனங்களுக்கும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் புரோமைன் இன்டஸ்ட்ரியல் சால்ட் மற்றும் சல்பேட் ஆப் பொட்டாஷ் எனப்படும் முக்கிய தொழில் ரீதியான கெமிக்கல்களை உற்பத்தி செய்து பல நிறுவனங்களுக்குச் சப்ளை செய்து வருகிறது . ரஞ்சித் என்பவர் நிர்வாக இயக்குனராகவும் நிறுவனராகவும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு இயக்குனர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

முக்கியமாக இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குஜராத்தில் அதிக அளவில் இருக்கிற காரணத்தினால், அம்மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்கள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையை பொருத்தவரையில் நங்கநல்லூர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், தி.நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

வருமான வரித்துறையின் இந்தச் சோதனை இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம் மற்றும் வரி ஏய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.