தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

By Jayakumar
02 Aug 2025, 07:07 AM
மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்காது மூக்கு தொண்டை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து

இந்த நிலையில் கடந்த ஜூலை 9ம் தேதி மருத்துவமனையில் பணி முடிந்து திரும்பியபோது திடீரென வந்த ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிகணேஷ் (31) என்பவர் மருத்துவர் ரமேஷ் பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்தியால் குத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று இடங்களில் வெட்டு காயங்கள் பெற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

விசாரணையில் கத்தியால் குத்திய நபர் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிய கணேஷ் என்பதும் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. கத்தியால் குத்தியது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா நகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் பரிந்துரையின் பெயரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பாண்டி, கணேசை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.