Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அரசு வேலைக்காக கணவன் கொலை? மனைவி மீது சந்தேகம் வெளியான அதிர்ச்சி தகவல்!

By VASUKI
06 Feb 2025, 08:01 PM
அரசு வேலைக்காக, மனைவியே அவரது கணவனை கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பகீர் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி..? இது திட்டமிட்ட கொலையா..? என்ன தான் நடந்தது..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பது பழமொழி. ஆனால், அரசு வேலைக்காக தனது கணவனை மனைவியே கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா நேஹாரூ நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் நாகரத்தினா என்பவருக்கும், 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சுரேஷின் தந்தை அரசு வேலை பார்த்துவந்த நிலையில், பணியில் இருந்தபோதே உயிரிழந்ததால், அந்த அரசு வேலை வாரிசு அடிப்படையில் சுரேஷுக்கு கிடைத்துள்ளது.   

இதனையடுத்து மொளக்காலுரூ தாலுக்கா அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த சுரேஷ், தனது மனைவி, தாய், சகோதரர், சகோதரிகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், இது சுரேஷின் மனைவிக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், சுரேஷை கட்டாயப்படுத்திய அவரது மனைவி, தனிக்குடித்தனத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் சுரேஷ் திடீரென உயிரிழந்துள்ளார். சுரேஷுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும், சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டதாகவும் நாகரத்தினா தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். 

அதேநேரம், சுரேஷ் உயிரிழந்ததை, அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். ஆனால், இந்த செய்தி உறவினர்கள் மூலம் சுரேஷின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சுரேஷின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், ஆனால், அதனை மறைத்து அவருக்கு நாகரத்தினாவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷின் தாய் சரோஜம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. 

இதனையடுத்து லோக்ஆயுதா போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார் சரோஜம்மா. அரசு வேலைக்காக தனது மகனை அவரது மனைவி நாகரத்தினா கொலை செய்துவிட்டதாகவும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து 4 மாதங்கள் கழித்து சுரேஷின் உடலை மயானத்திலிருந்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர் காவல்துறையினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.