தமிழ்நாடு

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

By VASUKI
02 Oct 2025, 09:08 AM
விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி தீப்பற்றிய விபத்தில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்தது எப்படி?

சென்னையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர் காரில் கேரள மாநிலம் மூணாறுக்குச் சென்றுள்ளனர். அதிகாலையில், விக்கிரவாண்டி அருகிலுள்ள நாகம்மை காட்டன் மில் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது.

கார் முதலில் சாலையின் மையத் தடுப்புக் கட்டையில் மோதி, பின்னர் எதிரே வந்த லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் விளைவாக, கார் உடனடியாகத் தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில், காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் காரிலேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்:

சென்னையை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சம்சுதீன், ரிசி மற்றும் ஆவடியை சேர்ந்த மோகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த அப்துல் அஜீஸ் மற்றும் தீபக் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.