Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தங்கக் கடத்தல் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

By VASUKI
18 Sep 2025, 10:03 PM
பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம், நாகநாதபுரத்தைச் சேர்ந்த சீனி பாத்திமா என்பவர், தனது மூத்த மகன் சையது அப்துல்லா கொலையில், போலீசாரின் விசாரணை திருப்தியாக இல்லை எனக்கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

எனது மகன் சையது அப்துல்லா, செல்போன் மார்க்கெட்டிங் கடை நடத்தி வந்தார். எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணம் மற்றும் தங்கம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2023, ஏப்ரல் மாதம் சுமார் ₹5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டபோது, எனது மகன் உள்ளிட்ட சிலர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அப்போது, எனது மகன் சிலரைக் காட்டிக் கொடுத்ததால், கடத்தல் கும்பல் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய எங்கள் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு மிரட்டி வந்தது. இதனால் நாங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 16-ஆம் தேதி எனது மகனைச் சிலர் அழைத்துச் சென்றனர். அவர் வீடு திரும்பாததால் கேணிக்கரை போலீசில் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். மறுநாள், என் மகன் பல்வேறு காயங்களுடன் திருப்புல்லாணி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கடற்கரையில் பிணமாகக் கிடந்தார். இந்தக் கொலைக்குப் போலீசாரும் உடந்தையாக இருந்திருக்கலாமெனச் சந்தேகம் உள்ளதால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி அதிருப்தி:

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அவர்கள் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. கொலை சம்பந்தமான போதிய ஆதாரங்களையும், வங்கிப் பணப் பரிவர்த்தனை ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.