Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும்: தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

By VASUKI
10 Sep 2025, 02:39 PM
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 10ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில தினங்களாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை பெரிய மாற்றமின்றி இயல்பாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம்:

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு (செப். 10, 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.