தமிழ்நாடு

கர்நாடகாவில் கனமழை எதிரொலி:கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By Jayakumar
20 Sep 2025, 12:50 PM
கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 1003 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், இன்று 260 கனஅடி நீர் அதிகரித்து, விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்துக்கொண்டிருக்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் பாதுகாப்புக்கருதி வரத்தாக உள்ள 1290 கனஅடிநீர் அணையில் உள்ள 7 மதகுகளின் வழியாக திறந்து விடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

அணையில் வெள்ளப்பெருக்கால் தொடர்ந்து ஆற்றங்கரையோரமாக உள்ள கிராமங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதாக அறிவித்துள்ளார். வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிகளில் 41.33 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வெளியேறும் நீரில் நுரைப்பொங்கி செல்கிறது. வழக்கமாக மழைக்காலங்களில் நுரை அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது நுரையின் அளவு குறைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.