Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு!

By Christon
16 Sep 2025, 11:21 AM
சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த பலத்த சூறைக் காற்றுடன் கூடிய கனமழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

திருப்பி அனுப்பப்பட்ட விமானம்

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், விமான நிலையத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துப் பறந்த பின், பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

இதேபோல், துபாய், லண்டன், ஷார்ஜா ஆகிய நகரங்களிலிருந்து வந்த பிற விமானங்களும் சிறிது நேரம் வானில் வட்டமடித்த பின்னரே, மழை ஓய்ந்ததும் சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

புறப்பாடு தாமதம்

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மொரீஷியஸ், தாய்லாந்து, துபாய், ஷார்ஜா, லண்டன், அபுதாபி, டெல்லி, கொச்சி உள்ளிட்ட சுமார் 10 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

மொத்தம் 14 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த திடீர் வானிலை மாற்றம் விமான நிலைய நடவடிக்கைகளில் தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தினாலும், மழை ஓய்ந்த பின்னர் இயல்பு நிலை திரும்பியது.