Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

By VASUKI
27 May 2025, 09:41 PM
கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வரும் பயணிகள் விமான புறப்படும் நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வருவதற்கு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் வழியாக டேராடூன் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர் மேலும் அவர்கள் வைத்து இருந்த உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. அப்பொழுது பயணி ஒருவர் பையில் இருந்த கை துப்பாக்கி தோட்டா வைத்து இருந்தார். அதனை பறிமுதல் செய்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரதீப் குமார் என்பதும், இவர் டேராடூனில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கை துப்பாக்கி மற்றும் தோட்டாவை பறிமுதல் செய்து அவரை கோவை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் பீளமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.