தமிழ்நாடு

ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா...கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

By Jayakumar
16 Jun 2025, 07:06 AM
ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு எடுத்து வந்த துப்பாக்கி தோட்டாவை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை
கோவை விமான நிலையத்தில் வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் அபுதாபி செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பயணி சிபு மேத்யூ என்பவரின் உடைமைகள் சோதிக்கப்பட்டது.

கேரள இளைஞர்

மேலும் அவரின் உடல் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.அப்பொழுது அவரது ஷூவின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து சிபு மேத்யூ என்ற அந்த பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பயணியிடம் போலீஸ் நடத்திய விசாரணை அவர் கேரள மாநிலம் கொச்சின் பரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதனைத் தொடர்ந்து அவர் துப்பாக்கி தோட்டாக்கள் எதற்காக மறைத்துக் கொண்டு சென்றார்? துப்பாக்கி போட்டோக்கள் வைத்து இருப்பதற்கு உரிய உரிமம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.