Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் மோசடி..!

By VASUKI
24 Apr 2025, 10:12 AM
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட ஜிஎஸ்டி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் அண்ணாநகர் 12வது பிரதான சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும், கடந்த ஓராண்டு முன்பு சதீஷ்குமாருக்கும் தனக்குத் சர்ச்சில் வைத்து பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் பழகி வந்தாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சதீஷ்குமார் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி அவருடன் நெருங்கிப் பழகி பழகியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சதீஷ்குமார் தன்னிடம் பேசாமல் தவித்து வந்த நிலையில், அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துடன் மிரட்டல் விடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சதீஷ்குமார் தனக்கு தெரியாமல் வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதில் சதீஷ்குமார் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீஸார் ஜிஎஸ்டி அலுவலக உதவியாளர் சதீஷ்குமார் கைது செய்து அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.