தமிழ்நாடு

ஆளுநர் இல. கணேசனுக்கு தலையில் காயம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!

By Jayakumar
08 Aug 2025, 08:47 AM
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மயக்க நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இல. கணேசன் கடந்த நான்கு நாட்களாகச் சர்க்கரை அளவு அதிகமானதால் கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். சென்னை தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் காலைத் திடீரென மயங்கி விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நாகலாந்து ஆளுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இல. கணேசன் அவர்கள் செப்டம்பர் 2022 முதல் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். இதற்கு முன், அவர் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்கத்தின் தற்காலிக ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.