Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

By Christon
17 Jan 2026, 12:32 PM
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீறி வரும் காளைகளும், அவற்றை அடக்கத் துடிக்கும் வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டி வரும் வேளையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் போட்டியை நேரில் நேரில் காண அலங்காநல்லூர் வந்தடைந்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் ரசித்த முதல்வர்

அலங்காநல்லூர் வந்த முதல்வருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், விழா மேடையில் அமர்ந்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளையும், மாடுபிடி வீரர்களின் வீரத்தையும் முதல்வர் வியப்புடன் கண்டுகளித்தார். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குத் தனது கரங்களால் தங்க நாணயங்கள் மற்றும் மோதிரங்களைப் பரிசாக வழங்கி அவர்களைக் கௌரவித்தார்.

மாடுபிடி வீரர்களின் நீண்டகாலக் கனவு நனவு: அரசுப் பணி உறுதி

இந்த விழாவின் சிகரமாக, ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசுப் பணி முன்னுரிமை: போட்டிகளில் அதிக காளைகளைத் தழுவி சாதனை படைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

பயிற்சி மற்றும் சிகிச்சை மையம்: அலங்காநல்லூரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான உயர்தர பயிற்சி மையம் மற்றும் காளைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்

கடந்த 15-ம் தேதி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வீரர் பாலமுருகன், வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என முதல்வருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அலங்காநல்லூர் மண்ணில் வைத்தே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.