தமிழ்நாடு

மாசாணி அம்மன் கோயில் நிதியில் ரிசார்ட்? பின்வாங்கியது தமிழக அரசு

By MUTHUKRISHNAN
15 Mar 2025, 12:47 PM
மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரெசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை 100 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் இருந்து 1.4 கோடி ரூபாய் எடுத்து ஊட்டியில் ரெசார்ட் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகன்நாத், கோயில் நிதியை கோயில் நலன் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டுமென பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை மீறும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதாக வாதிட்டார். 

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரெசார்ட் கட்டும் அரசாணையை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். இதனையடுத்து, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். முன்னதாக அரசின் முடிவினை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: சொத்துக்காக உயிருடன் உள்ளவருக்கு இறப்புச்சான்று: விஏஓ உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு