Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பயணிகளிடம் அத்துமீறிய அரசு பேருந்து நடத்துநர்.. கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகம்

By nagalekshmi
10 Mar 2025, 07:35 AM
காஞ்சிபுரத்தில் அரசு சொகுசு விரைவு பேருந்து நடத்துநர், பயணிகளை கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி திருப்பதி, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பேருந்துகள் வாயிலாக பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்யக்கூடியவர்களுக்கு இரவு நேரங்களில் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  பேருந்துகளானது குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் செல்லும் அரசு சொகுசு விரைவு பேருந்தில் திண்டினம் உள்ளிட வழிதடங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் சிலர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பேருந்து நடத்துநர், அவர்கள் செல்லும் வழித்தடங்களில் பேருந்து நிற்காது எனக்கூறி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை அப்டேட்

அப்போது, பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தை நிறுத்திய நடத்துநர், பயணிகளை தரைக்குறைவாக பேசி  கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். மேலும் வயதான முதியவர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். நடத்துநரின் செயலால் ஆத்திரமடைந்த பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் நடந்தவை குறித்து எடுத்து கூறிய நிலையில் போலீஸார் அதனை கண்டு கொள்ளாமல் பேருந்தை இயக்க சொன்னதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் அவ்விடத்தைவிட்டு பேருந்து இயக்கி சென்றுள்ளார். பயணிகளை தரக்குறைவாக பேசி அத்துமீறி கழுத்தை பிடித்தும், சட்டையை பிடித்தும் இழுத்து பேருந்தில் இருந்து கீழே தள்ளிய அரசு பேருந்து நடத்துநரின் செயல் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பேருந்து நடத்துநர்கள் சமீபகாலமாக பயணிகளை தொடர்ந்து தரக்குறைவாக பேசிவருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மீனவர்கள் பிரச்சினைக்காக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பு..!

பேருந்துகளில் பயணிக்கும் பொழுது முறையான சில்லறை இல்லை என்றால் பயணிகளை திட்டுவது, முதியவர்களை தரைக்குறைவாக பேசுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.