Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பொங்கலன்று உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

By Christon
15 Jan 2026, 10:57 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளன. பொங்கல் பண்டிகை தினமான இன்று இல்லத்தரசிகளுக்கும், நகை வாங்குவோருக்கும் இந்த விலையேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், இன்றும் அதன் வேகம் குறையவில்லை. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 13,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 80 அதிகரித்து, ரூ. 1,06,320 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருப்பது நகைப்பிரியர்களை வாயடைக்கச் செய்துள்ளது.

கட்டுக்கடங்காத வெள்ளி விலை: கிலோ ரூ. 3.10 லட்சம்!

தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்துள்ளது. இதன் படி, ஒரு கிலோ வெள்ளி முதல்முறையாக ரூ. 3,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 உயர்ந்து ரூ. 310-க்கு விற்கப்படுகிறது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்களே இந்தத் திடீர் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதால், விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகின்றன.