தமிழ்நாடு

ரூ.83,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு!

By Christon
22 Sep 2025, 04:44 PM
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த அதிரடி உயர்வு பண்டிகை மற்றும் திருமண காலங்களில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.

கடந்த 16-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.82,000-ஐ கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன்பிறகு விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. கடந்த 20 ஆம் ஒரு சவரன் தங்கம் ரூ.82,320-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (செப்.22), தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

இரட்டிப்பு உயர்வு

காலை நிலவரம்: காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.10,360-க்கும், ஒரு சவரன் ₹560 உயர்ந்து ₹82,880-க்கும் விற்பனையானது.

பிற்பகல் நிலவரம்: இதைத் தொடர்ந்து, பிற்பகலில் மீண்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ10,430-க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ₹83,440-க்கு விற்பனையாகி வருகிறது.

இதன் மூலம், ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தமாக ரூ.1,120 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு, மற்றும் உலகளாவிய சந்தை போக்குகள் ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாமென வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.