Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

By Christon
14 Jan 2026, 10:10 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து புதிய சிகரத்தைத் தொட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,06,240 என்ற நிலையை எட்டியுள்ளது.

வெள்ளி விலையில் வரலாறு காணாத அதிரடி உயர்வு

தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி விலையும் இன்று விண்ணைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ. 15,000 உயர்ந்து, முதல்முறையாக ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சத்தைக் கடந்து ரூ. 3,07,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 15 உயர்ந்து ரூ. 307-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 30,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலையேற்றத்திற்கான உலகளாவிய காரணங்கள்

இந்த அதிரடி விலையேற்றத்திற்குப் பின்னால் பல சர்வதேசக் காரணங்கள் இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் பதற்றம், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்புக் கொள்கைகள் மற்றும் ஈரான் போர்ச் சூழல் போன்றவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கித் திருப்பியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கலக்கத்தில் பொதுமக்கள்

தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, நடுத்தரக் குடும்பங்களை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாகத் திருமணச் சுபகாரியங்களுக்காக நகை சேமித்து வருபவர்கள், தற்போதைய விலை உயர்வால் தங்கள் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். வரும் நாட்களிலும் இந்த உயர்வு நீடிக்குமா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.