Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்வு.. விசைத்தறி சங்கங்கள் அரசுக்கு நன்றி

By VASUKI
28 Mar 2025, 08:58 PM
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர்  வரவேற்பு தெரிவித்த நிலையில், இதன் மூலம் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற்ற கைத்தறி மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, இந்த ஆண்டு இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும் என கைத்தறி துறை அமைச்சர் காந்தி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் , தமிழக நிதிநிலை அறிக்கையில் விசைத்தறிகளை  நவீனப்ப்படுத்த 50 கோடி ரூபாய் மற்றும் விலையில்லா இலவச வேட்டி சேலை 634 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி 30 சதவீதம்  உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்த நிலையிலம, தற்போது தமிழக அரசு 10 சதவீதம் கூலி உயர்த்தி  தந்துள்ளதாகவும், குறிப்பாக வேட்டிக்கான உற்பத்தி கூலி 22 ரூபாயிலிருந்து 26.50 ரூபாயகவும், சேலைக்கு 43 ரூபாயிலிருந்து 46.75 ரூபாயாக உயர்த்தி உயர்த்தி உள்ளதன் மூலம் தமிழகத்தில் உள்ள 5 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயரும் எனக்கூறிய அவர், கூலி  உயரத்தி கொடுத்தற்காக தமிழக அரசுக்கு  தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.