Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முதல் முறையாக விமான பயணம்.. உற்சாகத்தில் மாணவர்கள்!

By VASUKI
26 Mar 2025, 01:18 PM
கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்னர். சென்னை விமான நிலையம் வந்த அவர்கள், விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். 

கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்களை ரவுண்டு டேபிள் அமைப்பைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 25 மாணவர்களை முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கோவையிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் கோவைக்கு விமானத்தில் அழைத்து செல்ல இருப்பதாகவும் தகவல் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் மாணவர்களிடம் கேட்டபோது முதல் முறையாக விமானத்தில் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக அருகில் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தனது கனவுகள் நிறைவேற்றும் வகையில் விமானத்தில் அழைத்து வந்தது நன்றி என்றும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விமானப்பயணம் என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான். இன்றும் கிராமங்களில் வானத்தில் செல்லும் விமானத்தை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, அதில் பயணம் செய்யும் ஆசை அதிகளவில் இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்வது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இது போன்று மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு விமானத்தில் அழைத்து வந்த ரவுண்டு டேபிள் அமைப்பைச் சேர்ந்த தனியார் அமைப்பினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.