தமிழ்நாடு

நிதி நிறுவன உரிமையாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு- கரூரில் பரபரப்பு

By Jayakumar
11 Aug 2025, 10:32 AM
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள விவசாய கிணற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

இதையடுத்து வாங்கல் காவல் நிலைய போலீசார் கிணற்றில் இருந்த உடலை மீட்டபோது, அந்த உடலில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாய் பகுதியும் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது.

அந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, வாங்கல் அருகில் உள்ள முனியப்பனூரை சேர்ந்த சுப்பிரமணி என தெரியவந்தது. இவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதும், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பாததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் வாங்கல் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொங்கு பகுதியில் சமீப காலமாக வயதான முதியோர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், நிதி நிறுவன உரிமையாளரின் மர்ம மரணம் மேலும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.