Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. புதுச்சேரி மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம்..!

By VASUKI
01 Dec 2024, 12:32 AM
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை  புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர்  மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை  புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் நீர்  மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வங்ககடலில் நிலை கொண்டுள்ள "ஃபெஞ்சல் புயல்" மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து  இன்று மாலை புதுச்சேரிக்கு மிக அருகில் புயலாக கரையை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில்  கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக இன்று கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி  புதுச்சேரி  கடற்கரை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நல்லவாடு, மூர்த்தி குப்பம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள சுற்றுலா தளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

மேலும் தரைக்காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது புயல் நெருங்க நெருங்க காற்றின் வேகமும் கடல் சீற்றமும் அதிகரிக்கும் என்பதால் கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தளங்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சுற்றுலா பணிகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 கடந்த 4 நாட்களாகவே புதுச்சேரி கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது கடல் அலையானது ஆர்ப்பரித்துக் கொண்டு கரையை நோக்கி வந்து 5 அடி முதல் 6 அடி வரை எழும்புவதால் மீனவ கிராமங்களில் மழை நீர் உட்புகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

 மேலும் மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில் மீனவர்கள் 5வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் காற்றின் வேகம் 70 முதல் 90 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் உடனடியாக அவர்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை மேடான பகுதிகளில் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில்  லேசான சாரல் மழை பெய்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது தமேலும் புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.