Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

குடும்ப பிரச்சனை: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!

By VASUKI
16 Jul 2025, 07:35 PM
குடும்ப பிரச்சனையில் மனைவியைக் கையால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் காவல் நிலையத்தில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாற்காலியால் வந்த பிரச்சனை கொலையில் முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கிண்டி நக்கியரட்டி தோட்டம் லேபர் காலனி பகுதியில் 12 B பிளாக்கில் வசித்து வருபவர்கள் எழில் முருகன் (43) மற்றும் சுகுணா (38) தம்பதியினர். இதில் சுகுணா வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக இருக்கின்றார். கணவர் எழில் முருகன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு, அபி என்ற +2 படிக்கும் மகளும், அக்ஷயா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளார்கள்.

அதேசமயம் சுகுணாவின் தாயார் அதே பகுதியில் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுகுணாவின் கணவர், மாமியார் உட்காரும் சேரில் உட்கார்ந்ததாகவும் அதற்கு மாமியார் எழில் முருகனை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று எழில் முருகன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மாமியார் சேரில் மனைவி உட்கார்ந்து இருந்துள்ளார். அதைக் கண்ட அவர், மாற்றுத்திறனாளி மனைவி சுகுணாவை தகாத வார்த்தையால் திட்டியதோடு மட்டுமல்லாமல் கன்னத்தில் அடித்துள்ளார்.

அப்போது நேற்று தகாத வார்த்தையால் திட்டியதால் தற்போது நீ உட்கார்ந்திருக்கிறாயா? எனக் கூறி அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில் கீழே விழுந்த சுகுணா மீண்டும் எழுந்து நிற்கும்போது மயங்கி விழுந்து உள்ளார். அதனை எடுத்து அருகில் இருந்த அவரது அண்ணன் சுரேஷ் என்பவர் சுகுணாவை மீட்டு மாம்பலம் ஹெல்த் சென்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது சுகுணாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இறந்த சுகுணாவிற்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதாகவும் அதற்கு முறையான சிகிச்சை எடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கணவர் எழிலரசன் தன்னுடைய மனைவியை அடித்ததாகவும் அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவித்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார். உடலைப் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எழில் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர்.