தமிழ்நாடு

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

By Christon
12 Sep 2025, 09:17 AM
திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே திருமணத்துக்கு மீறிய உறவு காரணமாக தனது நண்பரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பவானிசாகர் கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி (38). பொக்லைன் ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருடைய நண்பரான சந்திரன் என்பவரும் பொக்லைன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

திருமணத்துக்கு மீறிய உறவு

நல்லசாமியும் சந்திரனும் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சந்திரன் அடிக்கடி நல்லசாமியின் வீட்டிற்கு வந்து தங்கி செல்வது வழக்கம் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நல்லசாமியின் மனைவி சிந்தாமணிக்கும் சந்திரனுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகவும், இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கொடூர கொலை

நேற்று இரவு நல்லசாமியின் மனைவி சிந்தாமணி உடன் சந்திரன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து நல்லசாமி ஆத்திரமடைந்தார். இன்று அதிகாலை, சந்திரன் தலையில் வீட்டில் இருந்த அடுப்புக் கல்லை போட்டு அவர் கொடூரமாகக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானிசாகர் போலீசார், சந்திரனின் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காகச் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு சில நாட்களுக்கு முன்புதான் சந்திரன் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நல்லசாமியைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.