தமிழ்நாடு

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

By VASUKI
09 Oct 2025, 12:25 PM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பிறந்தநாளை முன்னிட்டுச் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய அரசியல் கருத்துகளுக்குத் தீவிரமான விமர்சனத்தை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, அதிமுக அமித் ஷா திமுகவாகி விட்டதால், அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது" என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், "காங்கிரஸ் கூட்டங்களில் கூடத்தான் தவெக கொடியைக் காண்பிக்கின்றனர்" என்றும் அவர் தகவல் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் குறித்த விமர்சனம்

முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் குறித்துப் பேசிய பின், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்துக் கருத்துத் தெரிவித்த செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் ஸ்டாலின் பழிவாங்கும் எண்ணம் இல்லாத தலைவராக உள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

அதேசமயம், அதிகாரிகளின் மெத்தனப் போக்கு குறித்து அவர் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்தார். அதிகாரிகள் முறையாகப் பணியாற்றுவதில்லை. மாதக்கணக்கில் கோப்புகள் தேங்கும் நிலையில் உள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கடுமையாக விமர்சித்தார். ஆகவே, 24 மணி நேரத்திற்கு மேல் கோப்புகள் தேங்காதவாறு அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தினார்.