Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

காவல் நிலையத்தில் போதையில் ரகளை: காவலர் பிரபு மீது உயர் அதிகாரிகள் விசாரணை!

By VASUKI
12 Sep 2025, 08:36 PM
காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!
சென்னையில் உள்ள ராமாபுரம் காவல் நிலையத்தில், மதுபோதையில் பணிக்கு வந்த காவலர் ஒருவர், காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை அவதூறாகப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் பிரபு, சமீப நாட்களாகப் போதையில் காவல் நிலையத்திற்கு வருவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை அவர் போதையில் பணிக்கு வந்த நிலையில், காவல் ஆய்வாளர் மற்றும் உடன் பணிபுரியும் காவலர்கள் அவரைக் கண்டித்துள்ளனர்.

அப்போது, பிரபு ஆத்திரமடைந்து, சக காவலர்களையும், காவல் ஆய்வாளரையும் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார். இந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

சமீபகாலமாக, பிரபு இது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வருவதாகவும், சக போலீசாருக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடந்த சம்பவத்தின்போது, அவர் கஞ்சா அல்லது மது போதையில் இருந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவலர் பிரபு மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.