தமிழ்நாடு

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு!

By Christon
19 Jan 2026, 11:15 AM
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது நீட்டித்துள்ளது.

ஜனவரி 30 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க ஜனவரி 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த அவகாசத்தை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

இந்தச் சிறப்புத் திருத்தப் பணியின் போது, தமிழகம் முழுவதும் சுமார் 97.38 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மரணம் அடைந்தவர்கள், ஒரே பெயரில் பல இடங்களில் இருப்பவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் எனப் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால், 6.41 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 5.43 கோடியாகக் குறைந்துள்ளது.

இறுதிப் பட்டியல் எப்போது?

பெயர் சேர்க்க இதுவரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, வரும் பிப்ரவரி 17-ம் தேதி அன்று தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.