Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

By VASUKI
18 Sep 2025, 06:14 PM
மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்து எடப்பாடி பழனிசாமி அண்மையில் பேசியது குறித்துப் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, இதுபோன்ற தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்துவிடும். மறைந்த தலைவர்களைப் பலியாடு ஆக்கக் கூடாது. இது அரசியல் ரீதியான பிரச்சனை அல்ல, சமூக முரண்பாடுகளை உருவாக்கும் ஒரு செயல். இந்தப் பெயர், அந்தப் பெயர் எனச் சொல்வது சுமூகமான நிலையைப் பாதிக்கும். ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் சுந்தரலிங்கனார் பெயரை வைப்பதில் ஏற்பட்ட எதிர்ப்பு, இதுபோன்ற விஷயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதைக் காட்டுகிறது" என்றார்.

மேலும், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரைச் சந்திக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறாரெனக் குறிப்பிட்ட அவர், இது அவரது தனிப்பட்ட அரசியல் பிரச்சனை என்றும், அதனை அரசியல் ரீதியாக மட்டுமே கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டணி மற்றும் எதிர்காலத் திட்டம்

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த தங்களது நிலைப்பாட்டைப் பற்றிப் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான் எங்களது பிரதான நோக்கம். நாங்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குச் செல்ல வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு இருக்கும். ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.

மேலும், புதிதாகக் களமிறங்கியுள்ள த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்களின் செல்வாக்கை இன்னும் பன்மடங்கு அதிகமாக்குவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும், அதைக் கணித்த பிறகே ஒரு முடிவெடுப்போம் என்றும் கூறினார்.

தி.மு.க. அரசு மீதான விமர்சனம்

தி.மு.க அரசு மீதும் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசு அளித்த 505 வாக்குறுதிகளில் எது நிறைவேற்றப்பட்டது, எது நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் அறிவார்கள். நான்கரை ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளை இன்னும் நான்கு மாதத்தில் எப்படித் தீர்க்க முடியும்? அரசு அதிகாரிகளைக் கனிமவளக் கொள்ளைக்குக் கையெழுத்திட வைப்பது போன்ற தவறுகளால் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது. இதற்காக மக்கள் மாறுவார்கள் என்று சொல்ல முடியாது" என்றும் அவர் கூறினார்.