Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

By VASUKI
26 Sep 2025, 08:24 PM
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உணவு டெலிவரி செய்யச் சென்ற கல்லூரி மாணவருக்கும், தனியார் வங்கி ஊழியருக்கும் இடையே நாய் கடித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு முற்றியதால், டெலிவரி பாய் வங்கி ஊழியரைச் செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஃபைசல் (20), பகுதி நேரமாக உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இண்டஸ் இண்ட் தனியார் வங்கியில் பணிபுரியும் சண்முகநாதன் (54) என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்காக உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.

நாய்க்கான உணவை எடுத்துக்கொண்டு சண்முகநாதனின் வீட்டுக்குச் சென்ற ஃபைசலை, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் குரைத்துக் கடிக்க வந்துள்ளது. இதனால், பயந்துபோன ஃபைசல் உணவை வீட்டு வாசலில் வைத்துவிட்டு கீழே வந்து சண்முகநாதனைத் தொலைபேசியில் அழைத்து OTP கேட்டதுடன், நாய் கடிக்க வந்ததால் உணவை வாசலில் வைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சண்முகநாதன் OTP சொல்ல மறுத்ததோடு, வீட்டு வாசலில் வைக்கப்பட்ட உணவை இரண்டாவது மாடியிலிருந்து கீழே இருந்த இளைஞர் மீது தூக்கி வீசியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றவே, வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்த வங்கி ஊழியர் சண்முகநாதன், ஃபைசலை அடித்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இளைஞர் ஃபைசல், வங்கி ஊழியரைச் செருப்பால் வெகுவாகத் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வங்கி ஊழியர் சண்முகநாதன் அளித்த புகாரின் பேரில், அண்ணா சாலை போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.