Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

By VASUKI
24 Jan 2025, 03:09 PM
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் சர்வதேச உளவியல் மாநாடு நடைபெறுகிறது, பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு, பல்வேறு முன்னனி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் மாபெரும் அளவிலான திருக்குறள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், உலகெங்கும் பல இடங்களில் திருவள்ளுவர் கலாசார மையங்கள் திறக்க ஏற்பாடுள்ளதாகவும் தெரிவித்தார், 

மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வரக்கூடாது என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதற்கு தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மற்றும் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், இவ்விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது.

கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசு என்றும் மக்கள் பக்கம் தான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு ரத்து செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.