தமிழ்நாடு

செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை...மர்ம நபர்கள் வெறிச்செயல்

By Jayakumar
08 May 2025, 03:55 PM
செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்
திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. இவர் திமுகவில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் ஒப்பந்ததாரர் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் திருமலைக்கும் அவரது உறவினருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமலை கனிம வள வழக்கு தொடர்பாக செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது செய்யாறு அடுத்த சோழவரம் கிராமம் அருகே சென்ற போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலர் திருமலையை வழிமறித்து வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் திருமலை ரத்த வெள்ளத்தில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து தகவல் அறிந்த தூசி காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமலையை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.