தமிழ்நாடு

Ditwah Cyclone: சென்னை, திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

By Christon
01 Dec 2025, 02:09 PM
திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்த 'டிட்வா' புயல், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு மிக அருகில் உள்ளது.

தாழ்வு மண்டலத்தின் நகர்வு மற்றும் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது இதன் வேகம் குறைந்துள்ளது. இது தற்போது சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது.

இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.