Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Nelson: நெல்சன் மனைவி குறித்த செய்திகளை நீக்க வேண்டும்... சட்டரீதியாக நடவடிக்கை!

By Kalandhai
22 Aug 2024, 03:57 AM
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பலரும் கைதாகி வருகின்றனர். இதுதவிர மேலும் பலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவின் பெயரும் அடிப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் படங்களை இயக்கியுள்ளார் நெல்சன். இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் அவர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சனின் மனைவி மோனிஷாவிற்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கில் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் அவருடன் போனில் அடிக்கடி பேசியதாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 7ம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால், நெல்சன் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து, மொட்டை கிருஷ்ணனுக்கு 75 லட்சம் ரூபாய் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாக செய்திகள் வைரலாகின. 

மேலும், போலீஸார் தேடிவரும் மொட்டை கிருஷ்ணனுக்கு, மோனிஷா உதவியதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து நெல்சனின் மனைவி மோனிஷாவின் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், செய்திகள் ஊடகத்தில் பரவி வருகின்றன.  அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது எனக்கும், என் கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல். தவறான செய்தியை வெளியிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும். தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்சன் மனைவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து நெல்சன் மனைவி மீதான சந்தேகங்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே இச்சம்பவத்தில் நெல்சனின் மனைவி மோனிஷாவின் பெயர் அடிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.