தமிழ்நாடு

சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கை.. முதல்முறை MLA-க்களுக்கு கார் வழங்க முதல்வர் திட்டம்!

By Christon
15 Aug 2026, 12:12 PM
முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது, காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி முன்வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

விசிக எம்எல்ஏ-வின் கோரிக்கை

சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜோதிமணி, தனக்குச் சொந்தமாக வாகனம் இல்லாததால் வாடகை வாகனத்திலேயே பேரவைக்கு வந்து செல்வதாகத் தெரிவித்தார். 40 கி.மீ சுற்றளவு கொண்ட தொகுதிக்குள் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறியப் போதுமான வாகன வசதியோ, உடன் பணியாற்றுபவருக்கு ஊதியம் வழங்கிச் செயலாளராக நியமிக்கும் பொருளாதார வசதியோ தங்களிடம் இல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், பேரவையில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இதே நிலையில்தான் இருப்பதாகவும், சிலர் காலணி கூட அணிய முடியாத அளவிற்கு எளிய நிலையில் பணியாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். லஞ்சமற்ற ஆட்சியை வழங்க வேண்டுமென்றால், எம்.எல்.ஏ-க்களுக்குத் தேவையான வாகன வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கார் & உதவியாளர் வழங்க திட்டம்

இந்நிலையில், விசிக எம்.எல்.ஏ ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று, முதல்முறையாகத் தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர்களை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றவும், மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீர்வுகாணவும் இந்த நடவடிக்கை உதவும் எனக் கருதப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.