தமிழ்நாடு

வாட்ஸ்அப்பிற்கு வந்த Link... கோடிகளை தொலைத்த நபர்.. சைபர் கிரைம் எச்சரிக்கை

By leninakathiya
07 Aug 2024, 11:42 PM
ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மூளை சலவை செய்து 1 கோடியே 20 லட்சம் மோசடி கும்பலை சேர்ந்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் அடுத்த பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (57) ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதில் கடந்த ஓராண்டுக்கு முன், எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்து விளம்பரம் ஒன்று வந்தது. அந்த விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், நல்ல கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். 

அதை நம்பி, ஆன்லைன் டிரேடிங்கில் சேர்ந்து மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில், பல தவணைகளில் 1 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தேன். இந்நிலையில், நான் முதலீடு செய்த தொகையில், எனது கமிஷன் எடுக்க முயன்றபோது, எனது வங்கி கணக்கு செயலிழந்து விட்டது. முதலீடு செய்த தொகை, லாபத் தொகை என எதுவுமே எடுக்க முடியாத சூழலில் ஏமாற்றப்பட்டதை அறிந்த குணசேகரன், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். 

இது குறித்து விசாரித்த ஆவடி சைபர் கிரைம் போலீசார், திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த கிரிதரன் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி கும்பல் பல மாநிலத்தைச் சேர்ந்த பலரிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தேவை இன்றி, செல்போனில் வரும் மோசடி விளம்பரம் மற்றும் லிங்குகளை கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்..