Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கல்லூரி வளாகத்தில் ஆங்கிலேயர்கள் கல்லறை... அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!

By VASUKI
01 May 2025, 08:36 AM
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக் கல்லூரி செயல்பட்ட இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரின் மகன் டேவிட் யேல் அவருடைய நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.

இந்த இடத்தில் 5 மாடிகள் கொண்ட பன்னடுக்கு கட்டிடமும், வாகன நிறுத்தமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள இந்த கல்லறைகளை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் பி. மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இந்த கல்லறைகளை சுதந்திரத்திற்கு பிறகும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதால் இந்த கல்லறைகளை 4 வாரங்களில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் என். சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, பாரம்பரியமான, கலாச்சார நயமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் அத்தியாவசிய தேவையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது. பழைய சட்டக்கல்லூரியும் வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார கட்டுமானமாக இருப்பதால் அதன் சீரமைப்புக்கு இடையூறாக உள்ள இந்த 2 கல்லறைகளையும் வேறு இடத்துக்கு மாற்றியமைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேநேரம் உயர் நீதிமன்ற கட்டுமானப் பணிகளுக்கு மாஸ்டர் பிளானை உருவாக்கி, விதிமுறைகளுக்குட்பட்டு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.